சுய ஊரடங்கை கடைப்பிடித்து வீடுகளில் முடங்கிய சீன மக்கள்!
கொரோனா பரவல் அச்சத்தால் சீன மக்கள் அவர்களாகவே சுய ஊரடங்கை கடைபிடிப்பது போல் வீடுகளில் முடங்கினர். தொழிலாளர்கள் பணிக்கு வரத் தடையில்லை என்று சீன அரசு அறிவித்த பிறகும் பொதுமக்களில் பெரும்பாலானோர் வெளியே வரவில்லை. மக்கள் கூட்டம் இல்லாததால் சீன நகரங்களின் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன; வாகனங்களையும் காணவில்லை. பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட சீனாவின் பெரு நகரங்களில் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் பாதிக்கும் கீழே சென்றுவிட்டது. வீடுகளை விட்டு வெளியே வர மக்கள் தயங்குவதால் சீனாவின் பொருளாதார நடவடிக்கையே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக இருக்கும் சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி திட்டம் மக்கள் போராட்டத்தின் காரணமாக நீக்கப்பட்ட நிலையில் சில நாட்களிலேயே கொரோனா தொற்று எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. சீனாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சமாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டுப் பயன் அளிக்காமல் தினமும் 5000 பேர் மரணம் அடைந்து வருவதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.