இலங்கையில் 6 மணித்தியால மின்தடை ஏற்படும் அபாயம்!
இலங்கையில் அடுத்த வருடத்தில் 6 மணித்தியால மின்சார விநியோகத் தடைக்கு செல்லவேண்டியேற்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மின்சார அலகு ஒன்றுக்கான செலவு 56 ரூபா 90 சதமாக உள்ளபோதும், அதில் அரைவாசிக்கட்டணமே மின்சாரப் பாவனையாளர்களிடம் இருந்து அறிவிடப்படுகிறது.
எனவே இந்த நட்டத்தை ஈடுசெய்ய முடியாதுபோனால், எதிர்காலத்தில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்படும்.
இதன் காரணமாக அடுத்த வருடத்தில் 6 மணித்தியாலங்கள் வரையில் மின்சார விநியோகத்தடையை மேற்கொள்ளவேண்டியேற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கு, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றபோதும், அமைச்சரவை இதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதேநேரம் சட்டமா அதிபரும் தமது ஒப்புதலை வழங்கியுள்ளார் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.