மைதானத்தில் அவமானப்பட்ட ரொனால்டோ!

தென் கொரியா வீரர் ஒருவர் ரொனால்டோவை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் இது தொடர்பில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்தில் நேற்று நடந்த ‘எச் பிரிவு லீக் போட்டியில், போர்ச்சுகல் அணி தென் கொரியாவை சந்தித்தது. 

போர்ச்சுகல் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. ஆட்டம் துவங்கிய 5வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் தியாகோ தலாட் அடித்த பந்தை ரிக்கார்டோ வலது காலால் வலைக்குள் உதைத்து கோல் அடித்தார். 

27வது நிமிடம் தென் கொரியா அணிக்கு ‘கார்னர் கிக் கிடைத்தது. இதில் கிம் யங் ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 1–1 என சமன் ஆனது. 30, 42 வது நிமிடம் ரொனால்டோ எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முதல் பாதி 1–1 என சமனில் முடிந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ‘ஸ்டாப்பேஜ் நேரத்தில் தென் கொரிய வீரர் ஹீ சன், ஒரு கோல் அடிக்க போர்ச்சுகல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

முடிவில் போர்ச்சுகல் அணி 1–2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இருப்பினும் ஏற்கனவே 6 புள்ளி பெற்ற போர்ச்சுகல் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்தது. தென் கொரிய அணி 4 புள்ளியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதனிடையே இப்போட்டியின் போது தென் கொரியா வீரர் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

“மைதானத்தை விட்டு வெளியே போ” என ரொனால்டோவைப் பார்த்து ஆங்கிலத்தில் கொரிய வீரர் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால் ரொனால்டோ அமைதியிழந்து காணப்பட்டார். இதுகுறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், நான் அவரை அமைதியாக இருக்க கூற? எனக்கு கட்டளையிட அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *