இலங்கைக்கு வழங்கிய கடனை திரும்ப கேட்கிறது பங்களாதேஷ்!

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என நம்புவதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான பதில்கள் தெரிவிக்கப்பட்டதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களுடன் இணைந்து பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அந்நியச் செலாவணி ஒப்பந்தத்தின் கீழ் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த நேரத்தில் வழங்க முடியாத நிலையில் இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டு தடவைகள் காலத்தை நீடிக்க பங்களாதேஷ் இணக்கம் தெரிவித்திருந்தது.

இதன்படி அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உரிய கடன் தொகையை செலுத்துவதற்கு இலங்கை இணங்கியுள்ளதாகவும், உடன்படிக்கையின் பிரகாரம் உரிய நேரத்தில் உரிய பணம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *