இறக்குமதி தடையால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

367 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரயில் விபத்துகள் குறித்து தீவிர கவலை
ரயில்களுக்கான சிக்னல் அமைப்புகள் மற்றும் தொடர்புடைய உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளதால், ரயில் விபத்துகள் குறித்து தீவிர கவலை ஏற்பட்டுள்ளது.
இரும்பு, அலுமினியம், தண்ணீர் குழாய்கள் உள்ளிட்ட கட்டுமானத் துறையில் உள்ள பல உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், பெரிய அளவிலான கட்டுமான நிறுவனங்களின் செயற்பாடுகள் 60 சதவீதம் குறைந்துள்ளன.
காகிதம், அட்டை, செய்தித்தாள் மற்றும் புத்தகத் துறைகளில் வேலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்
மேலும், அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல விவசாய உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் எனவும் புபுது ஜயகொட மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நீதிமன்றினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அனுமதியளிக்கும் சட்டப்பிரிவு அரசியலமைப்பில் இருந்தே நீக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.