அண்ணன் மஹிந்தவை வெளியேற்ற தம்பி பசில் போடும் திட்டம்!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எதிர்பார்க்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை உரிய நேரத்தில் முன்னெடுத்திருந்தால் ராஜபக்ஷர்களை நாட்டு மக்கள் வெறுத்திருக்கமாட்டார்கள் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஆரம்பத்தில் இருந்து தடைகளை ஏற்படுத்தியுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களை ஒன்றிணைத்த நிலையில் ஒரு கட்டமைப்பற்ற அரசாங்கம் மாத்திரமே அமைக்கப்படும்.முறையற்ற வகையில் ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்தின் ஊடாக எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப் பெற வேண்டும் என்ற நோக்கம் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் உண்டு. மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை உரிய நேரத்தில் முன்னெடுத்திருந்தால் ராஜபக்ஷர்களை நாட்டு மக்கள் வெறுத்திருக்கமாட்டார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகோதர பாசத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட்டார்.அரசியல் ரீதியில் பஷில் ராஜபக்ஷ தன்னிச்சையாக செயற்படும் போது அது குறித்து அவர் அவதானம் செலுத்தாமலிருந்தது பிரதான குறைப்பாடாகும் என்றார்.