ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம் அதிர்ந்த பொலீசார்!
ஒரே பைக்கில் 4 பேர் செல்வது இந்தியா முழுவதும் எளிதாகக் காணக்கூடியக் காட்சி தான். பெட்ரோல் டேங்கில் ஒரு குழந்தை அதன் பிறகு வண்டி ஓட்டும் அப்பா, பின்னால் இன்னொரு குழந்தை அதற்கு அம்மா எனச் செல்வார்கள். ஒரு வீட்டு நபர்கள் அப்படிச் செல்வது தான் நடக்கிறது என்றால் நம்ம நாட்டு நெரிசல் பொதுப் போக்குவரத்துகளைக் கூட விட்டவைக்கவில்லை.
இரண்டு முதல் மூவரை மட்டுமே தாங்கி செல்லக்கூடிய வாகனங்களில், அளவிற்கு அதிகமான நபர்கள் செல்வது தான் வாடிக்கையாக இருக்கிறது.
இது போன்ற பயணங்களில் மாட்டிக்கொண்டால் சாண்ட்விசின் நடுவே இருக்கும் ஸ்டஃபிங்கை போல நசுங்கிப்போய் தான் போய் சேரவேண்டிய இடத்திற்குச் செல்வோம்.
இப்படிப் போய் போலீஸிடம் மாட்டிய சம்பவங்களும் நிகழ்ந்திருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது உத்தர பிரதேசத்தின் ஃபதேபூர் நகரத்தில்.
பிண்டகி கோட்வாலி என்ற இடத்தில், அதிவேகமாக சாலையில் ஓட்டிசென்றதற்காக ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்திய போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம் செய்துள்ளனர். ஆட்டோ டிரைவரின் மடியில் ஒரு சிறுவன், அவருக்கு இரு புறமும் இருவர் அமர்ந்துள்ளனர்.
பின்னால் இருந்த பயணியர் இருக்கையிலிருந்து, சிறுவர் சிறுமிகள், பெரியவர்கள் என இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள். உள்ளிருக்கும் நபர்களின் எண்ணிக்கை நின்றபாடில்லை.
உள்ளே இருந்து இறங்குபவர்களைக் காவல் துறை அதிகாரி ஒன்று, இரண்டு, என கணக்கிடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது