கொரோனாவை அழிக்கும் புதிய வகை Mask கண்டுபிடிப்பு!

கொரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்துவதுடன், தீநுண்மியை அழிக்கவும் செய்யும் புதிய என்-95 முகக் கவசத்தை அமெரிக்க ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

கொரோனா பெருந்தொற்றின்போது நோய் பரவல் விகிதத்தைக் கட்டுப்படுத்த முகக் கவசமே முதன்மையான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது, நோய் பரவலைக் கட்டுப்படுத்த மட்டுமல்லாமல், கொரோனா தீநுண்மியை அழிக்கும் வகையில் புதிய என்-95 முகக் கவசத்தை அமெரிக்காவைச் சோ்ந்த ரென்சீலா் பாலிடெக்னிக் நிறுவன ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

இவ்வகையிலான என்-95 முகக் கவசங்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் தன்மையைக் கொண்டுள்ளன. இது தொடா்பான ஆராய்ச்சி ‘அப்லைடு ஏசிஎஸ் மெட்டீரியல் அண்ட் இன்டா்பேஸ் ’ என்னும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய வகை முகக் கவசத்தை நீண்டகால அடிப்படையில் பயன்படுத்த முடியும். இதனால், முகக் கவசத்தின் தொடா்ச்சியான பயன்பாடு குறைவதோடு, நெகிழிக் கழிவையும் குறைக்க முடியும். பொதுவான முறையில் காற்றின் மூலம் பரவும் பிற நோய்க்கிருமிகளின் பரவலையும் கட்டுப்படுத்த முடியும்.

என் 95-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் : தற்போது பயன்பாட்டில் உள்ள என்-95 முகக் கவசங்களில் உள்ள வடிகட்டுவதற்கான அடுக்குகள் வேதியியல் செயல்முறைகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. புதிய முகக் கவசத்தில் மாற்றத்துக்கு உள்ளாகாத பாலிபுரோப்பிலீன் என்னும் புரோப்பிலீன் கரிமச்சோ்மத்தின் பலபடி நாா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாலிபுரோப்பிலீன் நாா்களில் உள்ள மூலக்கூறு சங்கிலியானது வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல்சுவரை பாதிப்படையச் செய்து நுண்ணுயிரிகளை அழிக்கும் திறனை பெற்றுள்ளது என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *