எரிபொருள் நெருக்கடி, மீண்டும் பணத்தை அச்சடிக்கத் தீர்மானம்!

மூன்று வாரகாலமே எரிபொருள் தட்டுப்பாட்டை பொறுத்தவரை மிகவும் நெருக்கடியான காலம் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் காணப்படும்  எரிவாயு மற்றும் எரிபொருளுக்காக வரிசைகள் மூலம் இது புலனாவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு தற்போது வந்துள்ளசேர்ந்துள்ள 3,500 மெட்ரிக்தொன்  லிட்ரோ எரிவாயுவை வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் மற்றும் தகனசாலைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடி குறித்து வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு போதுமான அளவு எரிவாயுவை பெறுவதற்கு இரண்டு வாரங்களாகும் என தெரிவித்துள்ள பிரதமர் அது நான்கு மாதங்களுக்கு போதுமானதாக காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் அதனை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருட்களை மின்சார உற்பத்தி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமைஅடிப்படையில் வழங்குவதாகவும், அது ஒரு வார காலத்திற்கே போதுமானது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் 40,000 தொன் எரிபொருளுடன் 16ஆம்  திகதி கப்பலொன்று வரவுள்ளதாகவும், மேலும் இரண்டு கப்பல்கள் வருவது உறுதியாகியுள்ளதாகவும் மாத இறுதிவரை போதுமான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் கடன் கிடைத்ததும் அடுத்த நான்கு மாதங்களுக்கு போதுமான எரிபொருளை நாட்டினால் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக பணத்தை அச்சடிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும், இலங்கையிடம் தற்போது ரூபாய் வருமானம் எதுவுமில்லை புதிய வரிகள் காரணமாக வருட இறுதியில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *