இணையத்தில் அமைச்சர்களின் சொத்து விபரங்களை வெளியிட உத்தரவு!
அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் , தமது சொத்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் ” என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சர்களுடனான சிறப்புக் கூட்டத்தின் போதே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் நேர்மையும், தூய்மையும் மிகவும் முக்கியம்.
அதன் அடிப்படையில், அனைத்து அமைச்சர்களும் பதவியேற்ற 3 மாதங்களுக்குள் தங்கள் மற்றும் தங்களது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
அதேபோல ஐ.ஏ.எஸ்., பி.சி.எஸ். (பிராந்திய சிவில் சர்வீஸ்) அதிகாரிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் தமது மற்றும் தங்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். பொதுமக்கள் அறியும் வகையில் அவை இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.
அத்துடன் ‘அரச பணிகளில் தங்கள் குடும்பத்தினர் தலையிடாது இருப்பதை அனைத்து அமைச்சர்களும் உறுதிப்படுத்த வேண்டும். நாம் நமது நடத்தையால் பிறருக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
மேலும் அரசு திட்டங்களை குறிப்பிட்ட காலத்திலும், தரமாகவும் நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் வழிகாட்ட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்