தனித்து விடப்பட்டுள்ள கோட்டாவும், தனிக்கப்போகும் மஹிந்தவும்!

இலங்கையில் குழப்படைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது தனிமையில் வாழும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

அதேநேரம் தமது சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவுக்கும் அவருக்கும் இடையிலான முறுகல் விரிவடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட்ட 60 பேர் மஹிந்தவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனினும் முன்னாள் அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, சரித்த ஹேரத் உட்பட்டவர்கள், மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, இடைக்கால நிர்வாகத்துக்கு இடம்தரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து அதற்கு எதிராக கருத்துரைத்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச, இடைக்கால நிர்வாகத்திலும் தாமே பிரதமராக இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இது இளைய சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் அரசியல் அமைப்பின்படி கோட்டாபயவுக்கு எதிராக குற்றப்பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள போதுமான ஆதரவு இல்லாத நிலையில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாதுபோனால், அவர் அப்படியே பதவியில் இருக்க இடைக்கால நிர்வாகமே அமைக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

எனினும் அதில் மகிந்த ராஜபக்ச உட்பட்ட ராஜபக்சர்கள் எவரும் இந்த இடைக்கால நிர்வாகத்தில் பங்கேற்கக்கூடாது என்ற கோரிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரிடம் இருந்து விடுக்கப்பட்டு வருவதால் மகிந்த ராஜபக்ச இறுதியில் தனித்து விடப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *