இலங்கை மக்கள் வீதியில் இதுவே இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசு!

புத்தாண்டைக் கொண்டாட வேண்டிய பொதுமக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுபடுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்குக் கொடுத்த புத்தாண்டு பரிசாகும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையினுடைய பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சிகள் கூறிய விடயங்களைப் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டமையே. நாங்கள் தொடர்ச்சியாகச் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினோம்.

மீள் செலுத்த வேண்டிய கடன்களைச் செலுத்துவதை நிறுத்திச் சம்மந்தப்பட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி காலத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை முன்வைத்தோம். ஆனால் இந்த எந்தவொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ளாத அரசாங்கமும், அதிகாரிகளும் செயல்பட்டதன் காரணமாக அதன் விளைவை இன்று மக்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தது மத்திய வங்கி ஆளுநர்களாகச் செயல்பட்டவர்கள் முழுக்க முழுக்க நூறு வீதம் அரசியல் மயப்பட்டு செயல்பட்டார்கள். அவர்கள் சரியான தீர்மானங்களைச் சரியான நேரத்தில் எடுக்கத் தவறிவிட்டார்கள்.

ஒரு நாட்டில் ஜனநாயக செயல்பாடு என்பது நாடாளுமன்றம், நீதித்துறை என்பன முக்கியத்துவம் பெறுவது போல மத்திய வங்கியும் சுயாதீனமாகச் செயல்பட வேண்டிய ஒரு அமைப்பு. ஆனால் அதை அரசியல் மயமாக்கியதன் காரணமாக இன்று இந்த பொருளாதார பின்னடைவை நாம் சந்தித்திருக்கின்றோம்.

அளவுக்கு அதிகமாகப் பணம் அச்சிடப்பட்டதால் இன்று எங்களுடைய ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவிழந்து வருகின்றது. எனவே இன்றைய மோசமான சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து தரப்பினரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர் திறமையான சிறந்த அனுபவத்தைக் கொண்ட ஒருவர். எனவே அவருடைய கருத்துகளைச் செவிமடுத்து முன்னோக்கிச் சென்றால் மாத்திரமே எங்களுடைய இலங்கை பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

எதிர்வரும் காலத்தில் இந்த நாட்டில் பிரதமராக வரக்கூடியவர் மதத்தையும் முன்னிலைப்படுத்தாது மக்களை முன்னிலைப்படுத்திச் செயல்படுகின்ற ஒருவராக இருக்க வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *