பல இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போன இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் ஆடை!
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பிரபல இசையமைப்பாளரின் ஆடை ஒன்று பல இலட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
1992 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார். இப்படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. இதானல் தனது முதல் படத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருது பெற்றார். அதன்பின் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்தார்.
மேலும், 2009 ம் ஆண்டு உயரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்று தமிழ்நாட்டையும், இந்தியாவையும் பெருமைபடுத்தினார். சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் இசைப்புயலாக வலம் வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்நிலையில், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28 வது தினவிழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் கைத்தறித் துறை அமைச்சர் கலந்து கொண்டு நன்கொடையாக ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் ஆடை வாங்க உதவும் திட்டத்தின் கீழ் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை ஏலம் விடப்பட்டது. இதில் அவர் அணிருந்திருந்த ஆடை ரூ.6.75 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
பிரமோத் சுரடியா என்பவர் இந்த ஆடையை வாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆடை ஏலத்தில் விடப்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றது.