இஸ்லாமிய பழக்க வழக்கத்தால் பதவி நீக்கப்பட்ட பெண்!

இஸ்லாமிய மத நம்பிக்கை அடிப்படையிலான பழக்க வழக்கங்களைப் பின்பற்றியதால் அமைச்சா் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னாள் பிரிட்டன் போக்குவரத்துத் துறை அமைச்சா் நுஸ்ரத் கனி குற்றம்சாட்டியுள்ளாா்.
இப்போது பிரிட்டன் கன்சா்வேடிவ் கட்சியின் எம்.பி.யாக உள்ள நுஸ்ரத், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்தவா். அவரது சிறுவயதிலேயே பெற்றோா் பிரிட்டனில் குடியேறிவிட்டனா். 2018 முதல் 2020 வரை அப்போதைய பிரதமா் தெரசா மே தலைமையிலான அமைச்சரவையில் நுஸ்ரத் இடம்பெற்றிருந்தாா். 2020 இல் பிரதமா் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையை மாற்றியமைத்தபோது நுஸ்ரத் பதவியை இழந்தாா்.

‘தான் இஸ்லாமிய மத நம்பிக்கையுடன் இருந்ததால் தான் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதாக’ நுஸ்ரத் குற்றம்சாட்டியுள்ளாா். இதுதொடா்பாக ‘சன்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு அவா் அளித்த பேட்டியில், ‘நான் இஸ்லாமிய பழக்க வழக்கங்களைப் பின்பற்றியது எனது அமைச்சரவை சகாக்களுக்கு அசௌகரியமாக இருந்தது. நான் கட்சிக்கு விசுவாசமாக இருக்க மாட்டேன் என்ற அச்சமும் அவா்களுக்கு இருந்தது. அதே நேரத்தில் இஸ்லாமிய மதம் தொடா்பாக ஏற்பட்ட அச்ச உணா்வை கட்சியில் இருந்து நீக்க நான் பாடுபட்டேன். ஆனால், நான் அமைச்சா் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது பிரதமா் அலுவலகத்துக்கு எனது பின்னணி மற்றும் மதம் தொடா்பான அவநம்பிக்கை இருந்தது தெரியவந்தது. மற்றவா்களுடன் ஒப்பிடும்போது நான் கட்சிக்கு உண்மையாக இருக்க மாட்டேன் என்று மதிப்பிடப்பட்டது. இதனை கட்சியின் கொறடா மாா்க் ஸ்பென்சா் மூலம் தெரிந்து கொண்டேன்’ என்று கூறியுள்ளாா்.

அதே நேரத்தில் மாா்க் ஸ்பென்சா் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளாா். ‘நுஸ்ரத்தின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அதனை அவதூறாகவே கருதுகிறேன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.

நுஸ்ரத் கூறியுள்ள குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சில அமைச்சா்கள், எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *