விருது வாங்கிய எலி உயிரிழப்பு!
கம்போடியாவில் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை மோப்ப சக்தியால் கண்டுபிடித்து நாட்டின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருந்த எலி தற்போது உயிரிழந்தது.
தாண்சானியா நாட்டில் பிறந்த ஆப்ரிக்க வகை எலி தான் மகவா. இந்த எலிக்கு மோப்ப சக்தி இருந்திருந்த நிலையில், இதனை அதிகரிக்க கம்போடியா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு எலிக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமான APOPO நிறுவனத்தின் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற எலிகளை ஹீரோ ரேட்ஸ் என அழைத்தது.
எலிகள் கண்ணி வெடிகள் மற்றும் வெடிபொருட்களை மோப்பம் பிடித்து சொல்வதால், மனித உயிர்கள் பலியாவதை தவிர்க்க முடிகிறது.
இந்த ஹீரோ ரேட் மகவா, இதுவரை 71 கண்ணிவெடிகளையும், 38 வெடிப்பொருட்களையும் தனது மோப்ப சக்தியால் கண்டறிந்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
எட்டு வயதான மகவா, தன்னுடைய ஐந்து ஆண்டு காலத்தில் பல வெடி பொருட்களை மோப்ப சக்தியால் கண்டறிந்ததால், துணிச்சலுக்கான உயரிய விருதை மகவா பெற்றதுடன், கடந்த ஜுன் மாதம் ஓய்வு பெற்றுள்ளது.
கடந்த வாரத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் விளையாடிய இந்த எலி வார இறுதியில் எதுவும் சாப்பிடாமல் சோர்வாக இருந்துள்ளது. விரைவில் சரியாகிவிடும் என்று நினைத்த பயிற்சி நிறுவனத்திற்கு இறுதியில் அதிர்ச்சியே கிடைத்துள்ளது.
தற்போது குறித்த மகவா எலி உயிரிழந்துவிட்ட நிலையில், குறித்த நிறுவனம், தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.