ரயிலுடன் மோதி தீப்பிடித்த கார்,வத்தளையைச் சேர்ந்த பொறியியலாளர் பலி!
கடுகதி புகையிரதத்தில் கார் ஒன்று மோதியதில், குறித்த காரில் பயணித்த வத்தளையைச் சேர்ந்த பொறியியலாளர் (55) ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (01) முற்பகல் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த உத்தர தேவி புகையிரதத்தில் மோதியே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
குறித்த கார் புகையிரத கடவையில் கவனயீனமான முறையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது புகையிரதத்துடன் மோதிய குறித்த கார், குறிப்பிட்ட தூரத்துக்கு புகையிர பாதையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென தீப்பிடித்துள்ளது.
இதன்போது குறித்த காரில் பயணித்த வத்தளையைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் 55 வயதான பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் புகையிரத எஞ்சினும் தீயினால் சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
தீயணைப்பு பிரிவினர் அங்கு வரவழைக்கப்பட்டதாகவும் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்த அவர், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.