உலகின் முதல் ரோபோ நீதிபதி!
உலகின் முதல் ரோபோ நீதிபதியை வடிவமைத்து சீனா உலகநாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உலக நாடுகளுக்கு கடுமையான போட்டியாக விளங்கும் சீனா தற்போது செயற்கை நுண்ணறிவை கொண்ட ஒரு ரோபோ நீதிபதியை உருவாக்கியுள்ளது.
இந்த ரோபோ நீதிபதி, வழக்கு விசாரணையை கேட்டறிந்து 97% துல்லியமான தீர்ப்புகளை வழங்கும் என அதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்றத்தில் வாதங்களை கேட்டு தீர்ப்புகளை தரும் வல்லமை படைத்தது இந்த ரோபோ என கூறப்படுகிறது. அந்த வகையில் கிரெடிட் கார்டு மோசடி, திருட்டு மற்றும் விபத்து போன்ற வழக்குகளை இதனால் கையாள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
2015-ல் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை பதிவாகி உள்ள வழக்குகளின் தரவுகள் இந்த ரோபோவிற்கு பதிவேற்றப்பட்டுள்ளது.
இதனால் வழக்கறிஞர்களின் பணிச்சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், என்ன தான் இந்த ரோபோ நீதிபதி ஒரு அருமையான படைப்பு என்றாலும் மக்கள் மத்தியிலும் பிற வழக்கறிஞர்கள் மத்தியிலும் பெரிய அளவில் நம்பிக்கையை ஈட்டவில்லை.
மேலும் இந்த ரோபோவால் வழக்குகளை கேட்டு தவறுகளைக் கண்டறிய முடிந்தாலும் இதனால் சரியான தீர்ப்பு வழங்க முடியாது எனவும் அவ்வாறு ஒரு நிலை வந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.