அரசியல்வாதிகளின் வாக்குவாதம் குத்துச்சண்டையில் முடிந்தது!
பிரேஸிலைச் சேர்ந்த இரு அரசியல்வாதிகளின் வாக்குவாதம் குத்துச்சண்டையில் முடிந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேஸின் அமேசோனாஸ் மாநிலத்தின் போர்பா நகரின் மேயரான சிமாவோ பெய்ஷோட்டோ என்பவருக்கும், அந்நகரின் முன்னாள் கவுன்சிலரான எரினியூ ஆல்வாஸ் டா சில்வா என்பவருக்கும் இடையில் தான், அதிக நாட்களாக மோதல் இருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில், அmண்மையில் சில்வா, மேயர் மீது அதிகமான புகார்களைத் தெரிவித்து வந்ததோடு மோசமான வார்த்தைகளால் அவரைத் திட்டியுள்ளார்.
மேலும் தன்னுடன் நேருக்கு நேராக சண்டையிட வருமாறு மேயரை அழைத்துள்ளார்.
இதற்கு சம்மதித்த மேயரும் “மோதலுக்கு நான் தயார், ஆனால் நான் வீதியில் சண்டை போடும் போக்கிரி கிடையாது, நான் மேயர் பொறுப்பில் உள்ளேன். சண்டை போட்டே ஆக வேண்டும் என்பது தான் அவரின் விருப்பம் என்றால், நான் தயார், நான் என்றைக்கும் தோல்வியைத்தான் பரிசாக கொடுத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் குத்துச்சண்டைக் களத்தில் சண்டையிட்டுக்கொண்டனர். இவர்களது குத்துச்சண்டையைப் பார்க்க பொதுமக்களும், அவர்களது ஆதரவாளர்களும் அங்கு திரண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் போட்டியின் இறுதியில் மேயர் வெற்றி பெற்றதாக நடுவரால் அறிவிக்கப்பட்டார்.
சண்டை முடிந்த பின் வெற்றியடைந்த மேயர் பேசியதாவது, “நகர மக்களிடம் இது போன்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்காக தான் இந்த சண்டை போட சம்மதித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.