போஞ்சி ஒன்றுக்கு 15 ரூபாவும் கரட் ஒன்றுக்கு 25 ரூபாவும் கொடுத்து வாங்கும் நிலையில் மக்கள்!
போஞ்சி ஒன்றிற்கு 15 ரூபா மற்றும் கரட் ஒன்றிற்கு 25 ரூபாவை செலுத்த வேண்டிய காலம் வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையை விட தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரம் மிகவும் ஸ்திரமாக இருப்பதால் பொருளாதார வீழ்ச்சிக்கு கொவிட் தொற்று நோயை காரணம் காட்ட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
கையிருப்பு தற்போது 1.5 பில்லியன் டொலராக உள்ளது. எரிபொருள் மற்றும் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்தும் போது இது 1.1 பில்லியன் டொலராக குறையும். இது இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான வெளிநாட்டுக் கையிருப்பு நெருக்கடியாகும்.
அடுத்த இரு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் 5 பில்லியன் டொலர்களையாவது பெறத் தவறினால் நாடு ஸ்தம்பித்து விடும். இந்தத் தொகையை அரசால் பெற முடியாவிட்டால் இந்நாட்டிலுள்ள மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச சமூகத்துடன் சிறந்த உறவைக் கொண்ட ஒரு தலைவர் இலங்கைக்குத் தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.