ஜனாதிபதிக்கு வாக்களித்த மக்கள் திருப்தி அடையவில்லை என தேரர் தெரிவிப்பு!
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/09/mu-ko2.jpg?resize=650%2C447&ssl=1)
கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்ற போது மங்கல நிகழ்வாக இருந்த போதும் தற்போது அமங்கல நிலை காணப்படுவதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாம் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டு எச்சில் துப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சௌபாக்கிய நோக்கு என்ற அடிப்படையில் கோட்டாபய ராஜபக்க்ஷ அரசாங்கம் செயல்பட்டாலும் வாக்களித்த மக்கள் திருப்தி அடையவில்லை.
சிலர் வந்து எங்களிடம் கேட்கின்றனர், தேரர் அவர்களே! இது கடவுள் சாபமா அல்லது கடவுள் கோபமா என்று. அன்று கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்ற போது மங்கல நிகழ்வாக இருந்தபோதும் தற்போது அமங்கல நிலை காணப்படுகிறது.
ஒருசிலர் பதவி விலகுகின்றனர், சிலர் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கின்றனர், மத்திய வங்கி ஆளுநர் அழுத்தம் காரணமாக பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலை ஏற்படும் என நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டை சீன கொலனியாக மாற்ற வேண்டாம் என கூறினோம். ஆனால் அனைத்தையும் சீனாவிற்கு விற்றுள்ளனர்.
தற்போது மேலும் 13 ஏக்கர் காணியை விற்க முயற்சித்து வருகின்றனர். அனலில் இருந்து நெருப்பில் விழும் நிலைக்கு மாறி உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.