டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வென்று கொடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 23 வயதேயான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீற்றர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறியிருந்தார்.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார். ஜேர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் ஆகியோர் நீரஜை பின்தொடர்ந்தனர்.

ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அவர் அதிகபட்ச தூரமாக 87.58 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மட்டுமின்றி மொத்த பதக்க எண்ணிக்கை 7 என உயர்ந்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *