மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா 4ஆவது அலை!
அதிதீவிரமாக பரவக்கூடிய டெல்டா வகை வைரஸ், மத்திய கிழக்கில் உள்ள மொராக்கோ முதல் பாகிஸ்தான் வரை 22 நாடுகளில் 15 நாடுகளுக்கு பரவியிருக்கிறது.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா 4வது அலை ஏற்பட்டு, தினசரி பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரிப்பதாக அப்பிராந்தியங்களுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் அகமது அல் மந்தாரி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், ‘‘புதிதாக பாதிக்கப்படும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே ஆவர்.
இப்பிராந்தியத்தில் 41 லட்சம் பேர் மட்டுமே 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீதம் மட்டுமே.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இம்மாதம் பாதிப்பு 55 சதவீதமும், பலி எண்ணிக்கை 15 சதவீதமும் அதிகரித்துள்ளது. வாரத்திற்கு 3 லட்சத்து 10 ஆயிரம் பாதிக்கப்பட்டு, 3,500 பேர் பலியாகின்றனர்’’ என்றார்.
வட ஆப்ரிக்காவில் உள்ள துனிசியா போன்ற நாடுகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.