மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் மீறினால் மீண்டும் பயணத் தடை!
நாட்டில் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
ஏதாவது ஒரு முறையில் தினசரி கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டால் மீண்டும் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்த நேரிடும்.”
இவ்வாறு கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இதே முறையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும். தொற்றாளர்கள் அதிகரித்தால் பயணத் தடை அல்லது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
எனவே, மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றல் மற்றும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றிச் செயற்பட வேண்டும். பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான தடை தொடரும்.
நாட்டின் அடுத்தகட்ட நிலைமை மக்கள் கையிலேயே உள்ளது. யாருக்குக் கோவிட் தொற்று உள்ளதென யாருக்கும் தெரியாது. இதனால் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” – என்றார்.