தலை’ சஜித்துடன் ‘வால்’ ரணிலுடன்!

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமித்த உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் மீண்டும் ஐ.தே.க. பக்கம் தாவிய தகவல்களை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தாலேயே ‘பல்டி’ அடித்தவர்கள் மீண்டும் சிறிகொத்தவில் தஞ்சமடைந்தனர் என காரணம் கூறப்பட்டது.இதுவும் ஒரு காரணம். ஆனால் இதன் பின்னாலுள்ள பாரியதொரு அரசியல் நகர்வு பற்றி பலருக்கு தெரியாது.

ஆம். கண்டி மாவட்டத்திலிருந்து இணைந்த உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுக்கு தலைமை தாங்கியவர், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட எம்.பியொருவரின் சகா. ஏன் வலது கை என்றுகூட விளிக்கலாம்.

எனவே, கண்டி மாவட்டத்திலுள்ள அந்த எம்.பியின் ஆசியுடனேயே சஜித் பக்கம் தாவியவர்கள் மீண்டும் சிறிகொத்த திரும்பினர் என்பதே ‘லேட்டஸ்’ தகவல்.

சிலவேளை ரணில் விக்கிரமசிங்க அரசியல் புரட்சியில் ஈடுபடும்பட்சத்தில் தனது வாரிசின் எதிர்கால அரசியல் நகர்வுகளைக் கருத்திற்கொண்டே அந்த எம்.பி. இரு தரப்பையும் அரவணைத்து செல்லும் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதன்ஓர் அங்கமாகவே ரணிலிடமிருந்து வந்த குட்டி யானைகளை மீண்டும் சிறிகொத்த அனுப்பியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

ரணிலின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக திகழ்ந்த அந்த எம்.பி., நெருக்கடியான கட்டத்தில்தான் சஜித் பக்கம் சென்றார். ஆனால் ரணிலை வெளிப்படையாக விமர்சிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும். சஜித்துக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் சிக்கலுக்குரிய விடயமாக மாறியது. இதற்கான யோசனையைகூட மேற்படி எம்.பியே முன்வைத்துள்ளார். ஆக அவரின் நகர்வுகள் தற்போது சஜித் அணியை ஏதோவொரு விதத்தில் கிலிகொள்ள வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *