வாகன இறக்குமதிக்கு பதிலாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இணையவழி மூலமான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மங்கள சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு இது உகந்த நேரமா என்றும் கேள்வியெழுப்பினார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து பாரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் எமது நாடு சுதந்திரமடைந்த பின்னர் உருவான, மிகவும் வறிய நாடாகக் கருதப்பட்ட பங்களாதேஷிடமிருந்து 200 – 250 மில்லியன் அமெரிக்க டொலர் வரையான கடனை இலங்கை பெறவுள்ளது.

தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக காணப்படும் இலங்கை, தற்போது பங்களாதேஷிடம் கடன் அப்படையிலான நிதிப் பரிமாற்றத்தைச் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பிழையான கொள்கைகள் காரணமாக நாம் மிகப்பாரிய சமூகப் பேரழிவை நோக்கிப் பயணிப்பது புலனாவதாகவும் இப்படியே சென்றால் நாடு சிரியாவின் நிலையையே அடையநேரிடும் என்றும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *