கொரோனாவின் முதல் ஆய்வறிக்கை வெளியானது!

2019 டிசம்பருக்கு முன்னர் சீனாவின் உகானில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த விசாரணை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழு, கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்து இருந்தனர்.
விசாரணையில் ஈடுபட்டுள்ள சீனத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் உலக சுகாதார நிபுணர்களுடன் இணைந்து இன்று தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார்கள்.
இந்த குழு ஜனவரி 14-ஆம் திகதி உகான் நகரத்தை சென்றடைந்தது. இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, கொரோனா வைரஸுடன் தொடர்புடையதாக அறியப்பட்ட முக்கிய தளங்களை பார்வையிட்டது. அவர்கள் முதலில் தொற்றுநோயின் தொடக்க இடமான ஹுவானன் கடல் உணவு சந்தையையும், கொரோனா தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தையும் பார்வையிட்டனர்.

உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் ஆழ்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது, அங்கு அவர்கள் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் செலவிட்டனர், மேலும் அவர்கள் கொரோனா வைரஸ்கள் \குறித்த சீனாவின் முன்னணி நிபுணர்களில் ஒருவரும், உகான் ஆய்வகத்தின் துணை இயக்குநருமான ஷி ஜெங்லி உட்பட பல விஞ்ஞானிகளை சந்தித்ததனர்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பல இடங்களில் விசாரணைகள் மேற்கொண்ட நிலையில், பல முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக குழு தெரிவித்துள்ளது.
இந்த குழு கடல் உணவு சந்தையில் ஒரு மணிநேரம் மட்டுமே செலவழித்தது, அங்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தொற்றுநோய்களின் முதல் கொத்துகள் தோன்றின. ஆய்வுக்குழுவினர் தங்கள் ஓட்டலுக்குள் பல நாட்கள் கழித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆய்வுக்குழு கூறியதாவது:-

2019 டிசம்பருக்கு முன்னர் உகானில் அல்லது வேறு எங்கும் கொரோனா உடன் தொடர்புடைய பெரிய நோய் தொற்று குறித்து குழு எதுவும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா நோய் தொற்றிற்கு உரிய விலங்கு குறித்த ஆதாரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

ஆய்வக கசிவுவினால் கொரோனா பரவியது என்பது மிகவும் சாத்தியமில்லை என கூறி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பென் எம்பரேக் கூறுகையில், சமீபத்திய உகான் விசாரணையில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன, ஆனால் கொரோனா வெடித்த விஷயத்தை வியத்தகு முறையில் மாற்றவில்லை. உகான் ஹுவானன் சந்தைக்கு வெளியே 2019 டிசம்பரில் பரவலாக கொரோனா புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்களை குழு கண்டறிந்து உள்ளது என கூறினார்.

உலகளவில் 23 லட்சம், மக்களை பலிவாங்கிய இந்த நோய் – வவ்வால்களில் தோன்றியது மற்றும் பாலூட்டி வழியாக மனிதர்களுக்கு பரவி இருக்க கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.ஆனால் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு கொரோனா நோய் தொற்றிற்கு உரிய விலங்கு குறித்த ஆதாரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கூறி உள்ளது.

விலங்குகளிடமிருந்து பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இதுவரை அதற்குரிய ஆதாரங்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளன” என்று சீனா அணியின் தலைவர் லியாங் வனியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *