ஜம் இய்யதுல் உலமாவை உடனடியாகத் தடை
செய்யப்பட வேண்டும்!
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் ஜம் இய்யதுல் உலமா தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த காலங்களில் இச்சபையினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்பு செய்துள்ளது.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட விசாரணை குழுவை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாத விவகாரத்தில் கடந்த கால அரசாங்கம் செய்த தவறுகளை தற்போதைய அரசாங்கமும் தொடர கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் புரையோடி போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து தொடர்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளோம். உண்மைகளை குறிப்பிடுவதால் ஒரு தரப்பினரால இனவாதிகள் என சித்தரிக்கப்பட்டுள்ளோம். பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம் சமூகத்ததுக்கு எதிராக செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எம்மீது முன்வைக்கப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவம் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் எந்தளவிற்கு வலுப் பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்தியது. இதற்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். இதுவரையில் காணப்பட்ட தவறை தற்போதைய அரசாங்கமாவது திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பாகும்.69 இலட்சமக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.