ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெளிநாட்டினர்களுக்கு குடியுரிமை!
வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் ஒன்றை ஐக்கிய அரபு இராச்சியம் முதல் முறை வெளியிட்டுள்ளது.
முதலீட்டாளர்கள், சிறப்புத் திறமை பெற்றவர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் போன்றோர் குடியுரிமை பெற தகுதியுடையவர்களில் அடங்குவதாக ஐக்கிய அரபு இராச்சிய துணை ஜனாதிபதி மற்றும் டுபாய் ஆட்சியாளர் செய்க் முஹமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்தார்.
இவர்கள் மற்றும் இவர்களது குடும்பத்தினர் இரட்டை பிராஜா உரிமையை வைத்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த குடியுரிமை வழங்குவதற்கு விண்ணப்ப நடைமுறை இல்லை. குடியுரிமைக்காக தனி நபர்கள் அரச குடும்பம் அல்லது அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படுவார்கள். தொடர்ந்து அந்நாட்டு அமைச்சரவை அது பற்றி முடிவு எடுக்கும்.
ஆனால், ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கும் கணிசமான நலத்திட்டங்கள் எல்லாவற்றுக்கும் புதிய குடிமக்கள் தகுதி பெறுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்குமுன் பலஸ்தீனர்களுக்கும் மற்ற சில குறிப்பிட்ட நாட்டினருக்கும் மட்டும் ஐக்கிய அரபு இராச்சியம் குடியுரிமை வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் மொத்த மக்கள் தொகையில் அந்த நாட்டில் உள்ள குடிமக்களின் எண்ணிக்கை வெறும் பத்தில் ஒரு மடங்குதான். அதாவது, அந்த நாட்டின் வளர்ச்சியில், செயல்பாட்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பங்கு அளவிடற்கரியது. 2005ஆம் ஆண்டு வெறும் 41 இலட்சமாக இருந்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் மக்கள் தொகை அதிவேகமாக உயர்ந்து 2010இல் 83 இலட்சமாக அதிகரித்தது. இதற்கு அங்கு ஏற்பட்ட தொழில்வளர்ச்சியும் அதனால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து குவிந்த பணியாளர்களுமே காரணம்.