45 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தி படம்பிடித்த கணவனுக்கு மரண தண்டனை, மனைவிக்கு ஆயுள் தண்டனை!
பாகிஸ்தானில் பல்கலைக்கழக மாணவியான யுவதியொருவரை கடத்தி. வல்லுவுக்குட்படுத்தி படம்பிடித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஒரு தம்பதியினர் குற்றவாளிகள் என பாகிஸ்தான் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்ததுடன், கணவனுக்கு மரண தண்டனையும் மனைவிக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது.
இத்தம்பதியினர் 45 சிறுமிகளை கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
33 வயதான காசிம் ஜஹாங்கீருக்கும் அவரின் மனைவியான கிரன் மெஹ்மூத் எனும் 24 வயதான யுவதி ஆகியோரே இத்தண்டனைகள் விதிக்கப்பட்ட தம்பதியினராவர். இவர்களுக்கு பெருந்தொகை அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ராவல் பிண்டி நகரிலுள்ள, அல்லாமா இக்பால் திறந்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான முதுமாணி (எம்.எஸ்.சி) பட்டப்பிடிப்பு மாணவி ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து இத்தம்பதியினர் கைது செய்யபட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மேற்படி மாணவி கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி ராவல்பிண்டி பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டில், தான் பயிற்சிப் பட்டறையொன்றில் பங்குபற்றுவதற்காக சென்றபோது ராவல்பிண்டி கோர்டன் கல்லூரிக்கு வெளியில் வைத்து கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கல்லூரி வாயிலுக்கு வெளியே தான் வந்தபோது, முகக்கவசம் அணிந்த பெண்ணொருவர், தன்னையும் ஒரு மாணவியாக அறிமுகப்படுத்திக்கொண்டதாகவும் அப்பெண்ணுடன் தான் நடந்து சென்றுகொண்டிருந்போது அப்பெண்ணின் கணவர் காரில் வந்தவுடன் அவர்கள் இருவரும் தன்னை காருக்குள் தள்ளி, குலிஸ்டன் கொலனியிலுள்ள அவர்களின் வீட்டுக்கு கொண்டு சென்றதாக அம்மாணவி முறைப்பாடு செய்திருந்தார்.
அவ்வீட்டில் மேற்படி ஆண் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் அவரின் மனைவி இக்குற்றச்செயலை வீடியோவில் பதிவு செய்ததாகவும் அம்மாணவி கூறியிருந்தார்.
இதையடுத்து காசிம் ஜஹாங்கீரும். ஆவரின் மனைவி கிரன் மெஹ்மூத்தும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு ராவல்பிண்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜஹாங்கீர் அலி கோண்டால், மேற்படி தம்பதிக்கான தண்டனையை கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.
இதன்படி, கடத்தல், வல்லுறவு குற்றங்களுக்காக காசிம் ஜஹாங்கீருக்கு மரண தண்டனையும் 5 இலட்சம் பாகிஸ்தான் ரூபா (சுமார் 6 இலட்சம் இலங்கை ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 10 இலட்சம் பாகிஸ்தான் (சுமார் 12 இலட்சம் இலங்கை ரூபா) இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தவறினால் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் 2016 ஆம் ஆண்டின் இலத்திரனியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழும் அவர் குற்றவாளியாக காணப்பட்டார். அதனால் அவருக்கு மேலும் 3 வருட சிறைத்தண்டைனையும் 10 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
அதேவேளை காசிம் ஜஹாரின் மனைவியான கிரன் மெஹ்மூத்துக்கு மாணவியை கடத்தியமைக்காக ஆயுள் சிறைத்தண்டனையும் 10 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன் இலத்திரனியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு மேலும் 3 வருட சிறைத்தண்டைனையும் 10 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், தகவல்தொழில்நுட்ப நிபுணரான குற்றம்சுமத்தப்பட்ட நபர், 45 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தி, புகைப்படங்களையும் வீடியோ படங்களையும் பிடித்ததாக ஒப்புக்கொண்டார் என பாகிஸ் தானின் ‘டோன் பத்திரிகை’ தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுடன பொலிஸார் தொடர்புகொண்ட போது, சமூக களங்கத்துக்கு அஞ்சி, வாக்குமூலம் பதிவு செய்ய முன்வரவில்லை எனவும் அந்த அதிகாரி கூறினார் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.