புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு!
இந்தியாவில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று 20 பேருக்கு இருப்பது உறுதியாகியுள்ளதால், மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றால், கொரோனா பரவல் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த ஆண்டு வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு வரும் ஒன்றாம் தேதி வரை மாநிலங்களில் நிலவும் சூழலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கலாம். தேவை ஏற்பட்டால், இரவு நேர ஊரடங்கு பிறப்பித்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முயலுங்கள்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையெ சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சென்னையிலுள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் மதுபான விடுதிகளை டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணியுடன் மூட வேண்டும்.
சென்னையிலுள்ள அனைத்து உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதியில்லை.
மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து கடற்கரை சாலைகளும் இரவு 10 மணிக்கு மூடப்படும். மேம்பாலங்கள் அனைத்தும் நள்ளிரவில் மூடப்படும்.
சென்னை மாநகரில் சுமார் 300 சோதனைச் சாவடிகள் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.