சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுயதனிமைப்படுத்தலில்!
ஐதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது.
அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் தயாராகி வருவதால் அதற்கு முன்பாக தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினரிடம் அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 14 ஆம் திகதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கினர்.
இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார். சில தினங்களுக்கு பிறகு நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ரஜினி, நயன்தாரா இணைந்து நடித்த காட்சிகளை படமாக்கினர். ரஜினி பங்கேற்ற பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது.
ரஜினி தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று வருவதாகவும், இதனால் திட்டமிட்டதை விட காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.