கொழும்பு வெள்ளவத்தையில் அதிகரிக்கும் கொரோனா!
கொழும்பு- வெள்ளவத்தை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாத்திரம் புதிதாக 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் பி.சி.ஆர்.பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 650 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
அதன்படி வெள்ளவத்தை பகுதியில் 65 பேருக்கும் பொறளை பகுதியில் 54 பேக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 387ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று, 701 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 26 ஆயிரத்து 353பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அத்துடன் இன்னும் எட்டாயிரத்து 874 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் 160 பேர் உயிரிழந்துள்ளனர்