வத்தளை தொழிற்சாலையில் 119 பேருக்கு கொரோனா!

இலங்கையில் COVID 19 வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 12,570 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களல் 5,918 தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 6,623 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை ,மினுவங்கொட மற்றும் திவுப்பிட்டிய கொவிட் கொத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 92 ஆகும்.

வத்தளையில் இயங்கி வந்த விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் மேலும் 68 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அங்கு மொத்தமாக பதிவாகியுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 119 ஆகும். மேலும் 400 பேர் வரை பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மீன் வியாபாரி காரணமாக தலாத்துஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட ஏழு பேர் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 5 கொவிட் மரணங்கள் நேற்று பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணரத்தன தெரிவித்தார்.
இந்த மரணங்களுடன் நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்களாவர். உயிரிழந்த ஐவரும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

தற்போதுள்ள நிலைமையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்தின் புளத்கோப்பிட்டிய பொலிஸ் பிரிவும், கலிகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *