உலக வர்த்தக மையத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா!
கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள குறித்த ஊழியர் கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தின் மேற்கு கோபுரத்தின் 32ஆவது மாடியில் பணிபுரிந்தவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அவர் கடந்த 8ஆம் திகதியே இறுதியாக தனது நிறுவனத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த ஊழியருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களின் முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு விரைவில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் குறித்து தொடர்ந்தும் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் உலக வர்த்தக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.