சஜித் அணியுடன் இணைகிறது யானைப் படை?
மாணாக சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைத்து சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு கால அவகாசம் அதிகமாகவே இருக்கின்றது என அக்கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சஜித் தலைமையில் உருவாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிக்கும் யோசனையொன்றும் எமக்கு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கயைில்,
ஐக்கிய தேசியக்கட்சியை சிறந்த முறையில் மீள கட்டியெழுப்ப தீர்மானித்துள்ளோம். அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். கட்சியை மாற்றியமைக்க வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமாகும்.
மேலும் கட்சி ஆதரவாளர்களினதும் நாட்டு மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். அதற்கான மாற்றத்தை நாம் நிச்சயம் ஏற்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சியின் தலைமை தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் சரியான தீர்மானம் எட்டப்படுமென நம்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கு மூன்று வீதமாக வீழ்ச்சியடைந்துள்ள எமது கட்சியை மாற்றியமைப்பதற்கு தேவையான காலம் இருக்கின்றது.
அத்துடன் தலைவரை மாற்றுவது தொடர்பாக ஓரிரு நாட்களில் தீர்மானம் எடுக்க முடியாது. அதற்கான கால அவகாசம் தேவை. தலைமையில் நிச்சயம் மாற்றம் ஏற்படுத்தப்படும்.
மேலும் கட்சி ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மத்திய செயற்குழு ஆகியவை தான் தலைவரை தீர்மானிக்கும்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொண்டு, இணைந்து பயணிப்பது குறித்த எதிர்பார்ப்பும் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.