கோப்பி மரத்தில் இணைக்கப்பட்ட பொறிக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு!
மாபகாண்டா பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தைச் சுற்றியுள்ள வேலியில் சிக்கிய சிறுத்தை அங்கிருந்து இலாவகமாக தப்பிச் சென்று கோப்பி மரத்தில் ஏறியபோது அந்த மரத்தில் அமைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பொறியில் சிக்கிய சிறுத்தையின் அடிவயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் இந்த விலங்கு இறந்துவிட்டது என நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரி பிரபாஷ் கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சிறுத்தை, 7 வயதுடையது என கருதப்படுகிறது, பொறியில் சிக்கியநிலையில் இதனை அப்பகுதி கிராமவாசிகள் கண்டு அறிவித்துள்ளனர்.
நவாலப்பிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் சிறுத்தையின் உடல் ரந்தெனிகல விலங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் என்று பிரபாஷ் கருணாதிலக தெரிவித்தார்.
இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மலையக பகுதிகளில் 6 சிறுத்தைகள் பொறிக்குள் சிக்கியுள்ளதுடன், அவற்றில் 3 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன.