நடிகர் அர்ஜுனின் மகளுக்கு கொரோனா !

நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பட்சன், அபிஷேக் பட்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது இஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், “சமீபத்தில் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவக்குழுவின் ஆலோசனையின்படி தான் வீட்டுத் தனிமையில்,  தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும், தங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ள ஐஸ்வர்யா,  அனைவரும் தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள் என்றும் நான் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் அர்ஜுனை பத்திரமாக இருக்குமாறும் ரசிகர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான‘பட்டத்து யானை’ என்ற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அதன்பிறகு எந்த திரைப்படங்களிலும் தோன்றவில்லை. இந்த நிலையில்தான் அவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் முதல் தமிழ் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் தான்  என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *