கோடை காலத்தில் இருந்து கொரோனாவால் தப்பித்தாலும் குளிர்காலமான நவம்பரில் மீண்டும் தலைதூக்கும்
கோடை காலத்தில் இருந்து தப்பித்தாலும் குளிர்காலமான நவம்பரில் 2வது கொரோனா அலை சீனா உட்பட உலக நாடுகளில் எழும்பும் என்று, உலக நாடுகளுக்கு சீன மருத்துவ நிபுணர் குழு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் ஷாங்காயில் கொரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழுவின் தலைவரும், கிழக்கு பெருநகர நகரத்தின் உயர்மட்ட மருத்துவமனைகளில் ஒன்றில் தொற்று நோய் துறை நிபுணருமாகிய ஜாங் வென்ஹோங் கூறியதாவது: உலகெங்கிலும் உள்ள நாடுகள் கோடை காலத்தில் கொடிய கொரோனா தொற்றுநோயை போதுமான அளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
ஆனால், வரவிருக்கும் குளிர்காலத்தில் (நவம்பர் – டிசம்பர்) கொரோனா வைரஸ் இரண்டாவது தாக்குதல் அலையை ஏற்படுத்தும். சீனாவின் பிற இடங்களில் தொற்றுநோய்கள் பரவல் இன்னும் இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்திய சீனாவின் அனுபவம், இந்த ஆண்டின் பிற்பகுதியில்தான் தெரியும். இருந்தாலும், வைரசின் ஆரம்ப பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் செய்யத் தேவையில்லை. சீன அரசாங்கம் எந்தவொரு பணிகளையும் நிறுத்தாது. வெளிப்பகுதியில் இருந்து வந்த கொரோனா பரவில் நிச்சயமாக மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தளர்வு ஆகியன சாதாரணமாக வாழ்வதற்கு வழிவகுக்கும். ஆனால் பாதிப்புகளை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. ஆரம்பகால உள்நாட்டு பாதிப்புகள் உச்சம் அடைந்த பின்னரும், நாடுகள் தொடர்ந்து தொற்றுநோயை எதிர்த்துப் போராட வேண்டும். அதன்படி எல்லா நாடுகளும் நோயை முறையாகக் கட்டுப்படுத்திய பின்னரே, அனைவரும் மீண்டும் நன்றாக வாழ முடியும். ெதாற்றுநோய் பரவலை கண்டுபிடித்து சோதனை மற்றும் தொடர்பு தடமறிதல், உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது ஆகியனதான், தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான ரகசியம்.
வருகிற மே மாதத்திற்குள் அமெரிக்கா தனது பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். அமெரிக்காவும், சீனாவும் தொற்றுநோய் தடுப்புக்கு இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும். மருத்துவ மட்டத்தில் எங்களுக்கிடையில் தொடர்பு ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. சீனாவை பொறுத்தவரை பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக சீன அதிகாரிகள் படிப்படியாக தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றனர். சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 82,341-ஐ எட்டியுள்ளது. மொத்தம் 3,342 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர்.
வூஹானின் மையப்பகுதியான கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டாலும்கூட, புதிய பாதிப்புகள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து திரும்பும் சீன நாட்டவர்களிடமிருந்து தொடர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
…