ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எங்களை மிருகங்களைப் போல தாக்குகின்றனர்
ஆளுங்கட்சி உறுப்பினர்களால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொத்துஹெரவில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“எங்கள் சொந்த அணிகளுக்குள் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் உறுதியாக நின்றிருந்தோம். ஆனால், இப்போது அரசாங்க தலைவர்களால் நாங்கள் மிருகங்களை போல தாக்கப்படுகிறோம்.
சுதந்திரக் கட்சி மற்றும் பிற இடதுசாரிக் கட்சிகளுடன் பொதுஜன பெரமுன கூட்டணி வைத்திருந்ததால் தான், ஜனாதிபதி தேர்தலில், கோட்டாபய ராஜபக்ச 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்றார் என்பதை நன்றியற்ற சிலர் மறந்து விட்டனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், சுதந்திரக் கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தன, சிலர் கை சின்னத்தின் கீழ் போட்டியிட பரிந்துரைத்தனர், மற்றவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வேரூன்றியிருந்தனர்.
அந்த வழிகளில் நாங்கள் ஒரு முடிவை எடுத்திருந்தால், கோட்டாபய ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டிருப்பார். ஆனால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நின்றோம்.
சிலர் இந்த உண்மையை மறந்து நாய்களின் நிலைக்கு எம்மை இழிவுபடுத்தியுள்ளனர்.
பொது எதிரியான ஐதேகவைத் தாக்குவதற்குப் பதிலாகசுதந்திரக் கட்சி மற்றும் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன மீது அரசாங்கத் தலைவர்கள் தாக்குகிறார்கள்.
அவர்கள் சுதந்திரக் கட்சியை அழிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இது எளிதாக இருக்காது.
சுதந்திரக் கட்சி இல்லாமல், பொதுஜன பெரமுன இருக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ” என்றும் அவர் கூறினார்