யாழ். பல்கலை வளாகத்திலிருந்து பி.ப. 2 மணிக்குள் அனைவரையும் வெளியேறுமாறு நிர்வாகம் பணிப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது.
அதற்கமைய அவர்களை இன்று பிற்பகல் 2 மணியுடன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் நினைவேந்தலையொட்டி யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டது.
எனினும், அவர்கள் இன்று முற்பகல் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடைகளைத் தகர்த்தெறிந்து ஏற்கனவே ஏற்பாடு செய்தமைக்கு அமைய மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில், யாழ். பல்கலைக்கழகம் இன்று பிற்பகல் 2 மணியுடன் மூடப்படுகின்றது எனவும், அனைத்து உத்தியோகத்தர்களையும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து உடன் வெளியேறுமாறும் பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி கடிதம் மூலம் பணித்துள்ளார்.