விளையாடிய தாவணி இறுக்கி 8 வயது சிறுவன் பரிதாபச் சாவு! – வவுனியாவில் சோகம்
வவுனியா, செட்டிக்குளத்தில் சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கி 8 வயது் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
செட்டிக்குளம், முகத்தான்குளத்தைச் சேர்ந்த சசிதரன் கிருஷான் (வயது – 08) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
இவர் தனது சகோதரனுடன் யன்னல் ஊடுாகக் கழுத்தில் சல்வார் தாவணியை மாட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தாவணி கழுத்தை இறுக்கியுள்ளது. அதை அவதானித்த 5 வயதுச் சகோதரன் கூக்குரலிட்டுள்ளார். அதையடுத்து மற்றைய சகோதரன் ஒருவரும், உறவினர்களும் சிறுவனை மீட்டபோதும், சிறுவன் உயிரிழந்திருந்தான் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறுவனின் சடலம் மேலதிக நடவடிக்கைக்காக செட்டிக்குளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, சிறுவனின் தந்தை கொலைக் குற்றச்சாட்டு ஒன்றில் 2015ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு போகம்பரைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாகச் இந்தச் சிறுவன் அடிக்கடி வினவுவார். தந்தையை இவ்வாறா கொலை செய்வார்கள் என்று கழுத்தை இறுக்கிக் கேட்பதை வழமையாகக் கொண்டிருந்தான். இப்போது இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது என்று சிறுவனின் உறவினர்கள் கூறுகின்றனர்.