முல்லைத்தீவு சிறுமி திடீரென உயிரிழப்பு! – காரணம் அறியப்படாததால் சடலம் கொழும்புக்கு அனுப்பி ஆய்வு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஒருவர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் அறியப்படாத நிலையில், உடல் பாகங்கள் ஆய்வுக்காகக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.

புதுக்குடியிருப்பு, 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அலக்ஸ் அஸ்வினி (வயது-7) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சுவீனமுற்ற சிறுமி உறவினர்களால் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சிறுமியின் உடல் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூற்றுச் சோதனை நடத்தப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் அறியப்படவில்லை. அதையடுத்து மேலதிக ஆய்வுகளுக்காக உடற்பாகங்கள் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன என்றும், அதன் பின்னர் கிடைக்கும் மருத்துவ அறிக்கையின் படியே உயிரிழப்புக்கான காரணத்தை அறிய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, சுகவீனமுற்ற சிறுமியை புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது சிறுமிக்கு சுமார் 20 நிமிடங்கள் தாமதித்தே சிகிச்சை வழங்கப்பட்டது என சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *