நிலாவின் நினைவேந்தல்!
யாழ். கொக்குவில் பகுதியில் 01.08.2007 அன்று இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் ஆகியோரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவன் சகாதேவன் நிலக்சனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
நினைவுத் தூபிக்கு நிலக்சனின் பெற்றோர், சகோதரன், உறவினர்கள் மற்றும் ஊடகத்துறை சமூகத்தினர் ஆகியோரினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், நிலக்சன் நினைவாக சுடர்களும் ஏற்றப்பட்டன.
யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவனும், ‘சாரளம்’ சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவரும், யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன், 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்தவேளை, அவரது வீட்டுக்கு அதிகாலை 5 மணியளவில் கூட்டாகச் சென்ற இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் ஆகியோர் நிலக்சனை அழைத்து அவரது பெற்றோர், சகோதரன் ஆகியோர் முன்னிலையில் சுட்டுப் படுகொலை செய்தனர்.