கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழர்கள் எங்கே? – விசாரணை தொடர்கின்றது என்கிறார் பொலிஸ் பேச்சாளர்
கொழும்பில் வைத்து வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அந்தவகையில், முன்னாள் நகைக்கடை உரிமையாளரான தம்பு சங்கர் கடத்தப்பட்டமை தொடர்பிலும் விசாரணை தொடர்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி மாலை கொழும்பு செட்டியார் தெருவில் வைத்து இனந்தெரியாத நபர்கள் வந்த வெள்ளை வானில் முன்னாள் நகைக்கடை உரிமையாளரான தம்பு சங்கர் என்பவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த இவர் கடத்தப்பட்டமை குறித்து அவரது சக நண்பர்களால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இதுவரையிலும் அது குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்று குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இது தொடர்பில் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.
இதேவேளை, நீர்கொழும்பு கடற்கரை வீதியில் வைத்து 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட 40 வயதுடைய சுப்பிரமணியம் தவராஜசிங்கம் என்பவர் தொடர்பான விசாரணைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.