முள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ஆய்வுக்கு!
முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றைத் தோண்டும்போது கண்டுபிடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
முல்லைத்தீவு நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று இந்தப் பணி நடைபெற்றது.
சட்ட மருத்துவ அதிகாரி, தடயவியல் பொலிஸார் ஆகியோரால் இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
எலும்புக்கூடு காணப்பட்ட பகுதி அகழ்வு செய்யப்பட்டு எச்சங்கள் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.
மண்டையோடு சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மனித எச்சத்துடன் இரண்டு கைக்குண்டுகள், துருப்பிடித்த துப்பாக்கி ரவைகள், வோக்கி டோக்கி ஒன்றின் சிதைவுகள், இலக்கத் தகடு, சயனைட் குப்பி ஆகியனவும் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட எச்சங்களிலிருந்து இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட இலக்கத் தகட்டில் த.வி.பு. – 2719 என்ற இலக்கம் காணப்பட்டது.