கள்ளக்காதல் மோகம்: கணவனையும் ஆண் குழந்தையையும் படுகொலைசெய்த கொடூர இளம்பெண்!
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தவெளியைச் சேர்ந்த தீபிகா என்ற இளம்பெண், உறங்கிக் கொண்டிருந்த தனது காதல் கணவர் ராஜாவை தலையில் கல்லைப் போட்டும், ஆண் குழந்தை பிரனீஷைக் கழுத்தை நெரித்தும் கொலை செய்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
அன்றாடம் மது அருந்தி விட்டு தன்னைக் கொடுமைப்படுத்தியதால் கணவரைக் கொன்றதாகவும், கொலைகாரியின் மகன் என்று ஊர் பேசக் கூடாது என்பதற்காக ஆண் குழந்தையையும் கொன்றதாகவும் பொலிஸிடம் தீபிகா தெரிவித்தார் எனக் கூறப்படுகின்றது.
வீட்டின் அருகே உள்ள ஓடையில் புதைக்கப்பட்ட சடலங்களைப் பொலிஸார் மீட்டனர்.
இருப்பினும் தீபிகா மட்டுமே இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகித்த பொலிஸார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தகாத உறவே கொலைக்குக் காரணம் என்று தற்போது பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குடிவெறியில் தீபிகாவிடம் ராஜா சண்டையிடும் போதெல்லாம், அவரது நண்பர் தாஜ்புரா சத்யா நகரைச் சேர்ந்த ஓட்டோ ராஜ் என்ற ஜெயராஜ் பிரச்சினையைத் தீர்த்து வைத்து வந்தார் எனக் கூறப்படுகின்றது.
இதன்மூலம், தீபிகாவுடன், ஜெயராஜூக்கு நெருக்கம் அதிகரித்து தகாத உறவு ஏற்பட்டது எனவும் சொல்லப்படுகின்றது. இந்தநிலையில் தான், திட்டமிட்டப்படி, கணவனையும், குழந்தையையும் கொலைசெய்து விட்டு, ஜெயராஜ் மூலம் சடலங்களை அப்புறப்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ஜெயராஜையும் கைதுசெய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயராஜிடம் மேற்கொண்ட விசாரணையில், ராஜாவையும், குழந்தையையும் கொலை செய்ய ஏற்கனவே இருவரும் சேர்ந்து திட்டம் போட்டடனர் எனக் கூறப்படுகின்றது.
ஆனால், தீபிகா கொலைத் திட்டத்தை அரங்கேற்றப் போவது தனக்குத் தெரியாது என்றும், கொலைசெய்த பின்னர்தான் தன்னிடம் சொன்னார் என்றும் ஜெயராஜ் கூறினார் என்று பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலையை மறைத்துவிட்டு ஜெயராஜிடம் சேர்ந்து வாழ்வதற்கு தீபிகா திட்டம் போட்டதும் அம்பலமாகியுள்ளது எனவும் சொல்லப்படுகின்றது.