முல்லைத்தீவு விபத்தில் இராணுவ அதிகாரி பலி! – மற்றொருவர் படுகாயம்
முல்லைத்தீவு மூன்றாம் கட்டைப் பகுதியில் முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை நோக்கிப் பயணித்த ஹன்ரர் ரக வாகனம் ஒன்று வற்றாப்பளையில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோத முற்பட்டவேளை அதைத் தவிர்ப்பதற்காக வீதியை விட்டு விலகி ஓரமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது வீதி ஓரமாகக் கடமையில் நின்ற இராணுவப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது ஹன்ரர் வாகனம் மோதிக்கொண்டதில் இராணுவப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தை ஏற்படுத்திய முள்ளியவளை குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த ஹன்ரர் வாகனத்தின் சாரதியை முள்ளியவளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளமையுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இந்த விபத்தின்போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த 22 வயதுடைய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பத்திரன என்பவர் உயிரிழந்துள்ளார். பொலனறுவையைச் சேர்ந்த 32 வயதுடைய திஸாநாயக்க என்ற இராணுவப் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.