தனியார் பஸ்ஸுடன் மோதுண்டது ஹயஸ்! 10 பேர் பரிதாபப் பலி!! – மஹியங்கனையில் அதிகாலை சோகம்

 

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பெண் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (17ஆம் திகதி) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுடன் பதுளையில் இருந்து மகியங்கனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வான் மகியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் நேருக்கு நேர் மோதியுள்ளது.

ஹயஸ் வாகனத்தில் பயணித்த 12 பேரும் படுகாயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த அவர்கள், நுவரெலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவிட்டு வீடு திரும்பியபோதே இந்த அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுமிகளும், மூன்று பெண்களும், நான்கு ஆண்களும் அடங்குகின்றனர். இவர்கள் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மேலும் இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து தனியார் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹயஸ் வாகனத்தின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனப் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *