இந்திய நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜட் தாக்கல்!
இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று நிதித்துறை அமைச்சு பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜட்டை தாக்கல் செய்தார்.
எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு 2019 – 2020ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜட்டை தாக்கல் செய்யும் என முதலில் தகவல்கள் வெளியாகின.
பின்னர் முழு பட்ஜட் அல்ல, இடைக்கால பட்ஜட் என உறுதி செய்யப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பட்ஜட் கூட்டத் தொடர் நேற்றுமுன்தினம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இந்நிலையில் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று, மக்களவையில் இடைக்கால பட்ஜட் தாக்கல் செய்யப்பட்டது.
நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் முற்பகல் 11 மணிக்கு பட்ஜட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
பட்ஜட் உரையில், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
நிதி அமைச்சுப் பதவி வகித்த அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று நியூயோர்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கிறார்.