இலங்கையில் ஊழல் ஒழிப்பு – ஹொங்கொங், மலேசியா களத்தில்!
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கு, ஹொங்கொங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
ஒஸ்ட்ரியாவின் வியானா நகரில் நடைபெற்றுவரும் இலஞ்ச மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டிற்கு இணையாக நடைபெற்ற பேச்சுகளின் அடிப்படையிலேயே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டின்போது ஹொங்கொங் அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
இதற்கான திட்டத்தை வகுப்பதற்காக, எதிர்வரும் 2 மாதங்களுக்குள் ஹொங்கொங் அதிகாரிகள் கொண்ட குழுவினர், நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சட்டத்தரணி ஜயமான்ன குறிப்பிட்டுள்ளார்.
மலேஷியாவின் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவருடனான சந்திப்பின்போது, இலங்கையின் அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.